கொலை முயற்சியில் இருந்து தப்பி, ஜேர்மனியில் சிகிச்சைபெற்று நாடு திரும்பிய ரஷ்ய எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸே நவால்னி ரஷ்யாவுக்கு நேற்று வந்த நிலையில் உடனடியாகவே கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஐந்து மாதங்களுக்கு முன் விஷம் வைத்து நவால்னியை கொலை செய்யும் முயற்சி இடம்பெற்றது.
இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நவால்னி, ஜேர்மனிக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக நவால்னி விமர்சித்து வந்தார். இந்நிலையில் தன்னைக் கொலை செய்ய ரஷ்ய அரசுதான் சதி செய்ததாக அவர் குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால் இதனை ரஷ்ய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில் 5 மாதங்கள் சிகிச்சைக்குப் பின் உடல்நிலை தேறி நேற்று ரஷ்யா வந்திறங்கிய 44 வயதான அலெக்ஸே நவால்னி ஷெரெமெட்டியோ விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் கைது செய்யப்பட்டார்.
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினிலிருந்து வந்த நவால்னிக்கு வரவேற்பளிக்க அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், மொஸ்கோவின் பல்வேறு விமான நிலையங்களில் காத்திருந்தார்கள். ஆனால் விமானத்தின் வழித்தடம் மாற்றப்பட்டு தரையிறங்கியது.
இதையடுத்து, விமானம் தரையிறங்கிய உடனேயே அலெக்ஸே நவால்னியை ரஷ்ய பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
ரஷ்யாவின் இந்தச் செயலுக்கு பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனம் தெரிவித்துள்ளன. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அலெக்ஸே நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது. சைபீரியாவின் டாம்ஸ்கில் இருந்து மொஸ்கோவுக்குச் செல்லும் விமான பயணத்தின்போது நவால்னி மயங்கி விழுந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, கோமா நிலையில் இருந்த நவால்னி அவசர சிகிச்சைக்காக ஜேர்மனி கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.